ஓம் ஸ்ரீ சாயிராம்
13 hits
நான் பதினோராம் வகுப்பில் அடிவைத்திருந்த தருணம் அது.
யாரோ குடிவருகிறார்கள் என அறிவிக்கும் வகையில் ஆட்கள் பொருட்களை எடுத்துவருவதுமாக இறக்கிவைப்பதுமாக எதிர்வீட்டில் ஒரே சலசலப்பு.
அந்தக் குடும்பத்திலும் பதினோராம் வகுப்பு பயிலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று அறிந்த எனக்கு ஏதோவொரு இனம் புரியா சந்தோஷம்.
இந்தவொரு பொருத்தம் போதாதா என்று கண்டதும் சிநகேமாய்த் தொடங்கியது எங்கள் நட்பின் பயணம்.
கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் வம்பு என்ற ரீதியில் பதின்பருவத்திற்கே உண்டான அழகிய தருணங்களுடன் இரண்டு வருடங்கள் உருண்டோட, பொதுத் தேர்வும் எழுதி முடித்திருந்தோம்.
எங்கள் எதிர்காலக் கனவுகளும், நாங்கள் வாங்கிய மதிப்பெண்களும் ஒன்றாக இருக்க, இருவரும் மேற்கொண்டு படிக்கக் கல்லூரி விளம்பரங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தோம்.
ஆனால் எங்கள் குடும்பச் சூழ்நிலைகள் வெவ்வேறாக இருக்க, என் தோழி பாலிடெக்னிக் இன்ஸ்ட்யூட்டில் சேர வேண்டியதாயிற்று.
படிப்பது வெவ்வறு இடங்களாக இருந்தால் என்ன; படிப்பது வணிகவியல் சார்ந்த பாடங்கள் தானே என மனம்தெளிந்து, ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருந்துகொண்டோம்.
இப்படி ஊர் கண்ணே பட்டுவிடும் போல நீரோடையென அமைதியாக ஓடிக்கொண்டிருந்த எங்கள் நட்பில் புயல்வீசிய நாளன்று.
நான் என் தோழியை அழவைத்த நாள் அது.
நான் கூனிக்குறுகி நின்ற நாள் அது.
எனக்கு அப்போது மூன்றாம் ஆண்டுக்கான தேர்வுகள் நடந்து கொண்டிருந்த சமயம். மறுநாள் நடக்கவிருந்த தேர்வுக்குப் படிக்க வேண்டிய பாடங்கள் ஏராளம் இருந்தது.
என்னை எந்தக் காரணத்திற்கும் தொந்தரவு செய்யாதே என என் அம்மாவிடம் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டு அறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டேன்.
அன்று மாலை என்னைச் சந்தித்துப் பேச வந்த தோழியிடம், அம்மா நாளை வரச்சொல்லி மறுப்புத் தெரிவிக்க, அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்துவிட்டது.
உடனே பார்க்க வேண்டுமென அவள் அழுதே விட்டாள். அதில் திடுக்கிட்ட என் அம்மா, அவளை உள்ளே அனுப்பினார்.
தோழி என் அறைக் கதவைத் தட்ட,
“தொந்தரவு செய்யாதேன்னு சொல்லிட்டுத் தானே மா போனேன்!” சிடுசிடுத்துக்கொண்டே கதவைத் திறந்தேன் நான்.
“ரெண்டே நிமிஷம் வித்யா!” என வேகவேகமாகத் தன் கையில் வைத்திருந்த பையில் இருந்து ஒரு அழகிய பச்சை நிற புடவையும், கேட்பரிஸ் சாக்கலைட்டையும் எடுத்தவள்,
“என் முதல் மாச சம்பளத்துலேந்து உனக்குத் தான் முதல் பரிசு வாங்கித்தரணும்னு ஆசையா இருந்துது. அதான் உடனே பார்க்கணும்னு சொல்லி நச்சரிச்சேன்.
நல்லா படி. மீதியை நாளைக்குப் பேசிக்கலாம்.” என என் தோழி பரிசுப்பொருட்களை தர,
எனக்கு என்னமோ போல் ஆயிற்று.
“அது… அது வந்து அருணா… நாளைக்கு அகௌண்ட்ஸ…” குற்றவுணர்ச்சியில் பேச முடியாமல் தலைகுனிந்தேன்.
“அதெல்லாம் சூப்பரா எழுதிடுவ. ஆல் தி பெஸ்ட்.” அதே அன்புடன் என் கன்னத்தில் தட்டி வாழ்த்திவிட்டுச் சென்றாள் அவள்.
நானும் நல்லபடியாகே பரிட்சை எழுதி தேர்ச்சி பெற்றேன். என் கடின முயற்சியால் இல்லை; என் அன்புத் தோழியின் கள்ளம் கபடமில்லாத வாழ்த்தினால்….
எங்களது இருபத்து ஐந்து வருட நட்பில், அவள் தந்த புடவையின் பொலிவும், அவள் பொழியும் பாசமும் துளிக்கூடக் குறையவில்லை.
கல்லூரிப் படிப்பில் வழி மாறிய எங்கள் பயணம், வேலை, திருமணம் என்ற காரணங்களால் தள்ளித் தள்ளிப் போன நிலையிலும், நான் சென்னைக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னால் போதும்! என்னைப் பார்க்க ஓடி வந்துவிடுவாள் என் ஆருயிர் தோழி.
என் வாழ்க்கையில் வரமாய் வந்த என் தோழி அருணாவுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.


Please Comment Here