ஓம் ஸ்ரீ சாயிராம்
233 hits
கண்ணாடிக் குவளையாய் உள்ளக் குமுறல்கள் சிதற,
கட்டிக் காத்த விரிசல்கள் சுக்குநூறாய் உடைந்தன!
குழைந்தாலும் குடைந்தாலும் என்னுயிர் நீ – அள்ளிய கரங்களை
குத்திக் கிழித்தாளா; தழுவி முத்தமிட்டாளா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள் அத்தியாயம் 06…
மேலதிகாரி முன் வாக்குவாதம் செய்யும் அளவிற்கு மனஸ்தாபங்கள் முத்திப்போய் விட்ட தர்மசங்கடத்தில் காயத்ரியை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் விக்ரம்.
நேராக விருந்தாளி அறைக்குள் ஓடி படுக்கையில் விழுந்தவளின் விசும்பல் சப்தங்கள் அவனை வாட்டியெடுத்தது. கீர்த்தனாவிடம் தெளிவாகப் பேசுவது ஒன்றே மனையாளின் மனக்குழப்பத்திற்கு மருந்து என்று யோசித்தவன், தங்கையை அழைத்தான்.
கணவனின் பணியிட மாற்றம் உறுதியாகும் வரை அண்ணனிடம் பேசுக்கூடாது எனத் தீர்மானமாக இருந்தவளோ, ‘இன்னும் நாலே நாள் காத்திரு ‘ண்ணா’ மனசுக்குள் கொஞ்சியபடி அழைப்பை ஏற்காமல் டிமிக்கி கொடுத்தாள்.
அவனும் விடுவதாக இல்லை. முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்று குரலஞ்சல் பதிவிட்டு அனுப்பினான்.
அதையும் சாமர்த்தியமாகத் தவிர்த்தாள் தங்கை.
அந்த முக்கியமான விஷயத்தை குரலஞ்சலில் பதிவு செய்து அனுப்புமாறும், தானும் பதிலை குரலஞ்சலிலேயே பதிவிட்டு அனுப்புவதாகவும் அறிவித்து அவனை மடக்கினாள்.
பிரச்சனைகள் தீர்ந்தால் போதும் என்று அவன் இருந்த மனநிலையில், குழந்தைகளைத் தத்தெடுக்கச் சொல்லி இனி தங்களை வற்புறுத்த வேண்டாமெனக் கட்டளையான தோரணையில் குரலஞ்சல் பதிவு செய்தான்.
ஆனால் அதை அனுப்பத்தான் மனம் ஒப்பவில்லை.
ரிஷிகுமார் ஊரில் இல்லாத நிலையில், தங்கை தன் முடிவை எப்படி எடுத்துக்கொள்வாள் என்ற பயம் அவன் கண்ணை மறைத்தது. பதிவு செய்திருந்த குரலஞ்சலை விரல்கள் வருட, விழிகள் தன்னவளைத் தழுவியது.
தங்கையா தாரமா என ஊசலாடிய மனம், தங்கை பக்கமே சரிந்தது.
அழுது அழுது ஓய்ந்து உறங்கும் மனைவியை மெல்லமாக அழைத்தான். அவளிடமிருந்து பதில் வராமல் நிமிடங்கள் உருண்டோட, அவள் தலையைக் கோதியபடி, “காயு மா… காயுமா…” என அழைத்தான்.
அவன் தீண்டலில் புரண்டவளின் உள்ளங்கையில் இருந்த விழுந்த மருந்து அட்டையைப் பதறியடித்து எடுத்துப் பார்த்தவனுக்கு, உயிர் போய் உயிர் வந்தது.
ஒற்றைத் தலைவலிக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரை என்று நிம்மதி பெருமூச்சுவிட்டவன், ஆழ்ந்து உறங்கும் மனையாளின் கன்னத்தில் தட்டிக்கொடுத்துவிட்டு, கதவைச் சாற்றிக்கொண்டு வெளியே வந்தான்.
அவளாகவே எழும்வரை தொல்லை செய்யக்கூடாது என நினைத்தவன், இருவருக்கும் தேவையான இரவு உணவைத் தயார் செய்தபின், தன் அலுவல் வேலைகளில் கவனத்தைத் திசைதிருப்பினான்.
இரவு ஒன்பது மணியாகியும் அவள் எழுந்தபாடில்லை. பசி முத்தினால் அதிலும் அவள் தலைவலி அதிகரிக்கும் என்ற நல்லெண்ணத்தில் அவளை வலுக்கட்டாயமாக எழுப்பினான்.
மருந்தின் வீரியத்தால், இரவா பகலா எனத் தெரியாத அளவிற்கு உறங்கியிருந்தவள், மின்விளக்கின் வெளிச்சத்தில் கண்கள் கூச எழுந்து அமர்ந்தாள்.
“காயு மா! நம்ம சண்டையை அப்புறம் வெச்சுக்கலாம். ரொம்ப நேரம் சாப்பிடாம இருந்தால் உன் தலைவலி ஜாஸ்தியாகும்…வா சாப்பிடலாம்.” அக்கறையாக அழைத்தவனின் பேச்சில் அவளுக்கு அனைத்தும் நினைவுக்கு வந்தது.
எல்லாம் தெரிந்தும் எதுவுமே நடவாவது போல தவிர்க்கும் அவனின் இந்தக் குணம்தானே அவளுக்கு எரிச்சலை மூட்டியது.
“என் தலைவலிக்குக் காரணமே நீங்களும் உங்க தங்கையும் தான்!” உறுமியவள், முகத்தை இருகரத்திலும் புதைத்துக்கொண்டு மீண்டும் கண்ணீரில் கரைய,
எத்தனை தன்மையாகப் பேசினாலும், பிடிவாதமாக அதையே சொல்லி கண்ணீர் சிந்தும் மனையாளின் போக்கில் அவனுக்கும் பொறுமை எல்லையைக் கடந்தது.
“நாங்க என்ன பண்ணோம்? எல்லாம் உன் விருப்பப்படிதானே நடந்துட்டு இருக்கு! உன் பிடிவாதத்தால தானே குழந்தைகள் பிறந்து இத்தனை நாளாகியும் பார்க்காம இருக்கேன்.” தேக்கிவைத்த ஆதங்கமெல்லாம் வார்த்தைகளாய் வழிந்தது.
“என்னம்மோ எல்லாத்தையும் என்னைக் கேட்டு செய்யறா மாதிரி பேசுறீங்க. எனக்குத் தெரியாமல் உங்க அருமை தங்கையோட ஃபோன்ல ரகசியமா பேசுறா மாதிரி, லண்டனுக்கும் போயிட்டு வர வேண்டியதுதானே.” பதிலுக்கு எகிறியவள்,
“என்னம்மோ இவரை நான் அடக்கி வச்சிருக்கா மாதிரி என்னைக் குறை சொல்ல வந்துட்டாரு!” எங்கோ பார்த்தபடி முணுமுணுத்தாள்.
அவள் விருப்பமே பிரதானம் என்று நினைத்திருந்ததால் தானே குழந்தைகளின் முகத்தை, புகைப்படத்தில் கூடப் பார்க்காமல் ஆசைகளை மனத்தில் பூட்டிவைத்திருக்கிறேன் என நொந்தவன் அமைதியாக நகர,
அதையும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
சண்டையை ஆரம்பித்துவிட்டு, தான் ஏதாவது எதிர்கேள்வி கேட்டதும், பாதியில் விட்டுச் செல்வதே இவனுக்கு வாடிக்கையாகிப் போனது எனச் சினம் கொண்டவள்,
“என்ன அமைதியா போறீங்க விக்ரம்? என்னைக் கவிழ்க்க, அடுத்து என்ன செய்யலாம்னு பலமா யோசிக்குறீங்களா?” வலிய பேசி நோகடித்தாள்.
இவள் சந்தேகத்திற்கு வரம்பே இல்லை எனத் தலையைச் சிலுப்பிக்கொண்டவன், ‘கீர்த்திகிட்ட பேசுறவரைக்கும் இவளோட சண்டை போடாம பொறுமையா இருக்கணுமே கடவுளே!’ மனதார பிரார்த்தித்து நகர,
“நீங்க என்னை விவாகரத்து செஞ்சிடுவேன்னு மிரட்டினாலும், ஒருபோதும் உங்க தங்கை சொன்ன திட்டத்திற்குச் சம்மதிக்க மாட்டேன். அதனால வேற ஏதாவது பெட்டரா யோசிங்க!” அவன் செவிகளில் விழும்படி உரக்கப் பேசினாள்.
நீள் பெருமூச்சுவிட்டு அவளருகில் அமர்ந்தவன், “நான் உன்னோட நிறைய சண்டைபோடுறன்னு தெரியுது காயுமா; உன் மனசுக்குப் பிடிக்காத விஷயமெல்லாம் செய்யறேன்னு ஒத்துக்கறேன். அதுக்காக உன்னை விவாகரத்து செஞ்சிடுவேனா? நீ என்னைப் புரிஞ்சு வச்சிருக்கறது அவ்வளவுதானா?” அவள் கன்னத்தை வருடி வினவினான்.
“உங்கள நல்லா புரிஞ்சு வச்சிருக்கறதுனால தான் சொல்றேன் விக்ரம்!” அவன் கரத்தை உதறியவள்,
“உங்க அருமை தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றலன்னு குறைசொல்லி, நம்ம கல்யாணத்த நிறுத்தின பாசமலர் அண்ணன் தானே நீங்க!” இடித்துக்காட்டி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அவ்வளவுதான்! அவன் பொறுமை எல்லாம் இருக்குமிடம் தெரியாமல் பறந்தது.
“அன்னைக்கு இருந்த சூழ்நிலையில் அப்படிப் பேசிட்டேன்னு பத்தாயிரம் முறை மன்னிப்புக் கேட்டு வருந்தினதுக்கு அப்புறமும், அதையே சொல்லிக் குத்திக்காட்டுற உன்கிட்ட பேசுறதே டோட்டல் வேஸ்ட்!” என உறுமிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
பசுமரத்தாணி நினைவுகள் என்பது, அதீத மகிழ்ச்சியைத் தந்த தருணங்கள் மட்டும் இல்லையே; மனத்தைப் புண்ணாக்கிய காயங்களும் தானே என உசுப்பேற்றிய மனசாட்சியின் பிடியில் சிக்கியவள் அவன் பேசியதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
ஆனால் விக்ரமோ, ஆவேசமாகப் பேசிவிட்டானே ஒழிய மனத்தில் குமுறி மொத்தமாய் உடைந்தான். வரவேற்பறையின் சயன இருக்கையில் விழுந்தவனின் மனத்தில் பல சிந்தனைகள்.
கீர்த்தனாவின் உடல் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு நிகழ்த்திய நாடங்களில், உடலாலும் உள்ளத்தாலும் மெல்ல மெல்ல தன்னைவிட்டு தூரம் சென்ற மனையாளின் உணர்வுகளை அலட்சியப்படுத்தி, பெரிய தவறு செய்துவிட்டதை உணர்ந்தான்.
விஷ்வரூபமாக உருமாறிய மனக்கசப்புகளைத் திருத்தி அமைக்கும் வழியைத் தேடி தேடி ஓய்ந்து, அப்படியே உறங்கியும் போனான்.
மருந்தின் உபயத்தால் மட்டுப்பட்டிருந்த ஒற்றைத் தலைவலி, மீண்டும் துளிர்விட, வயிற்றைப் பிரட்டியது காயத்ரிக்கு.
தண்ணீர் பாட்டிலை நிரப்ப வெளியே வந்தவளின் மனம், சயன இருக்கையில் அசௌகரியமாக படுத்து உறங்கும் கணவனின் நிலை கண்டும் இளகவில்லை.
ஆனால் சமையலறையில் வீசிய புதினா சட்னியின் வாசம் மூக்கைத் துளைத்ததும், அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. சாப்பிடலாம் என்று சமாதானம் பேச வந்தவன், வெளியே அழைத்துச் செல்வான் என்று தான் நினைத்திருந்தாள். தானே சமைத்து வைத்திருப்பான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
ஹாட்பேக்கில் சீண்டுவார் அற்று கிடந்த இட்லிகள், ஃப்லாஸ்கில் ஆறிப்போயிருந்த சுக்கு இஞ்சி சேர்த்த தேநீர் என ஒவ்வொன்றையும் திறந்து பார்த்தவளுக்கு குற்றவுணர்வு நெஞ்சை அழுத்தியது.
ஒரு சில நிமிடங்கள் கூடப் பசியைப் பொறுத்தக்கொள்ள முடியாதவன், தன் பிடிவாதத்தால் பட்டினி கிடக்கிறானே என அவனை ஏக்கமாகப் பார்த்தவளின் வீம்பெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் மறைய, அவனருகே வேகநடையிட்டாள்.
“விக்கிபா! சாப்பிடலாம் வாங்க.” முதுகைக் காட்டி ஒருக்களித்துப் படுத்திருக்கும் அவன் தோளில் மென்மையாகத் தட்டினாள்.
பதிலேதும் வராமல் போக, அவன் முகமருகே தலை சாய்த்தவள், “தூங்கிட்டீங்களா விக்ரம்?” காதோரம் இசைத்து, தலைகோதினாள்.
அசையக்கூட இல்லை அவன்.
அன்பிற்கும் ஆவேசத்திற்கும் இடையே போராடிய மனத்தை சமன்படுத்த வழித்தெரியாமல் திண்டாடியவள், சண்டையிட்டவன் இடமே நிம்மதியைத் தேடினாள்.
“எனக்கு மட்டும் உங்களோட சண்டை போடணும்னு ஆசையா; இல்லை உங்களைப் பிரிஞ்சு வாழத்தான் முடியுமா?
எதை உங்க வாயால கேட்டுடக்கூடாதுன்னு இத்தனை நாளா பயந்துட்டு இருந்தேனோ, அதை என்னையே சொல்ல வச்சிட்டீங்களே விக்ரம்.” என அவன் பின்முதுகில் தலைசாய்த்தவளின் கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்க, விட்டத்தைப் பார்த்தபடி மனம்போன போக்கில் புலம்பினாள்.
“கீர்த்தனாவின் குழந்தைகள்னு இல்ல விக்கிபா. எனக்கு எந்தக் குழந்தையையும் தத்தெடுத்துக்கும் அளவுக்கு மனசு இன்னும் பக்குவப்படல. தாமதமானாலும், நமக்கே நமக்குன்னு குழந்தை பிறக்கும்னு நம்புறேன். நீங்களும் அப்படி நம்புவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்.
ஆனால், கீர்த்தனாவின் யோசனைக்குச் சம்மதிச்சு நீங்களும் என்னை மலடின்னு சொல்லாமல் சொல்லிட்டீங்க விக்கிபா.
அப்படியும் என்னால உங்களை வெறுக்க முடியல. நான் கருத்தரிச்சிட்டா, இந்த மனஸ்தாபமெல்லாம் மறைஞ்சிடும்னு நெனச்சேன். ஆனால் நீங்க அதுக்கான எந்தவொரு முயற்சியும் எடுக்காம, குழந்தைகளைத் தத்தெடுக்குறதுலேயே பிடிவாதமா இருந்தீங்க.
என்கிட்டேந்து விலகியிருக்கும் உங்க போக்கை சகிச்சுக்கவும் முடியாமல், என் உணர்வுகளை வெளிப்படையா சொல்லவும் முடியாமல் தான், ஹிஸ்டீரியா வந்தா மாதிரி கூச்சலிட்டு சண்டை போடுறேன்.
கோபத்துல ஏதேதோ பேசி, நம்ம உறவை சிக்கலாக்கிட்டேன் புரியுது. இப்படியெல்லாம் நடக்கும் தெரிஞ்சுதான் அன்னைக்கே நம்ம கல்யாணம் செய்துக்ககூடாதுன்னு தடங்கல் வந்துது போல.” என விரக்தியில் சிரித்தவள்,
“இந்தப் பிரிவுக்கு அந்தப் பிரிவு எவ்வளவோ மேலா இருந்திருக்கும் விக்கிபா.” என்று கண்ணீரில் கரைந்தாள்.
திடுதிதுப்பென்று புரண்டு படுத்து அவளையே வெறித்துப் பார்த்தான் விக்ரம்.
“விக்…வி…நீங்க தூங்கலையா?” அவள் பேந்த பேந்த முழிக்க,
“காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தன் அம்மா,
கேட்கும் வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா”
ஸ்ருதி தப்பாது, திடமான குரலில் பாடியவனின் கண்கள் மட்டும் இமைக்காமல் அவளையே ஏறிட்டது.
அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தவித்த பெண், அவன் தோளில் முகம் புதைத்து விம்மி விம்மி அழுதாள்.
மனமுடைந்த மனைவியின் பின்முதுகில் ஆதுரமாய் தட்டிக்கொடுத்து அவள் முகத்தை நிமிர்த்தியவன், “மனசுல இருக்கறத எல்லாம் கொட்டிட்டையா. இப்போ மனசு லேசா இருக்கா?” மென்மையிலும் மென்மையாகக் கேட்டான்.
பாவையின் அழுகை உச்சஸ்தாயில் நீண்டது.
அவள் கண்களைத் துடைத்துவிட்டு, “முதல்ல சாப்பிடு! உன் மனசை அறுக்கும் விஷயம் எல்லாத்துக்கும் நானும் மனம்திறந்து பதில் சொல்றேன். அதுக்கு அப்புறம், நீ என்னை விவாகரத்து பண்ணனுமா, என்னை மதுரைக்கு அனுப்பணுமான்னு முடிவெடுத்துக்கோ,” என்று அவளை வலுக்கட்டாயமாக உண்ண வைத்தான்.
கணவனின் கனிவான உபச்சாரத்தில், உண்ணாவிரதம் இருந்தவளின் ரோஷமெல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாய் மாயமாகிப்போனது. மூக்கை உறிந்தபடி, இட்லிகளை புதினா சட்னியில் முக்கி மென்று விழுங்கும் அவளை ரசனையாகப் பார்த்திருந்தான்.
அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடியவள், “நீங்க சாப்பிடல?” கம்மிய குரலில் கேட்க,
“ம்ஹூம்!” அழகாய்ப் புன்னகைத்தான்.
“உங்களுக்குப் பசிக்கலையா?” விடை தெரிந்தும் தெரியாதது போலவே கேட்டாள்.
“பசிக்குது! ஆனால் நீ ஏதாவது மிச்சம் வெச்சேன்னா, அப்போ சாப்பிடலாம்னு இருக்கேன்.” வாய் நிறைய உணவைத் தேக்கி வைத்திருக்கும் அவள் கொழுகொழு கன்னங்களைக் குறும்பாக ரசித்தபடி, வலது கையை உணவு மேஜையில் ஊன்றி சௌகரியமாக அமர்ந்தான்.
அரிதாக சமைக்கும் கணவனின் கைப்பக்குவத்தில் தன்னையும் மறந்து, ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவள், அவன் தன் சந்தோஷத்தை கண்டுகொண்டுவிட்டான் என உணர்ந்தாள்.
வாயில் இருந்ததை வேகவேகமாக மென்று விழுங்கி, “நாலு இட்லி, ஒரு கப் சட்னி அரைச்சிட்டு, மிச்சம் வேற வெக்கணுமா உங்களுக்கு.” பொய்யாகச் சலித்தவள்,
“சட்னியை எவ்வளவு காரமா அரைச்சிருக்கீங்கன்னு பாருங்க…” குறைகூறியவாறே, ஒரு துண்டை அவன் வாயில் திணித்தாள்.
“சட்னிக்கு இட்லியைத் தொட்டு சாப்பிட்டால் அப்படித்தான் இருக்கும் மா.” நக்கல் செய்தவன், மேலும் இரண்டு இட்லிகளை அவள் தட்டிலேயே போட்டு, ஊட்டிவிடுவாள் என வாஞ்சையாகக் காத்திருக்க,
“நான் பேசின எல்லாத்தையும் கேட்டுட்டீங்களா விக்கிபா?” கம்மிய குரலில் வினவினாள்.
“சாப்பிடும்போது பேசக்கூடாது! ம்ம்…ஊட்டிவிடு!” அன்புக்கட்டளையிட்ட கணவனுக்கு மென்னகையைப் பரிசாய்த் தந்து அவன் சொற்படி நடந்தாள்.
“குழந்தை தத்தெடுக்கும் விஷயத்தைத் தவிர, வேற ஏதாவது விஷயத்துல நான் இந்த அளவுக்குப் பிடிவாதம் பிடிச்சிருக்கேனா?” சயன இருக்கையில் ஒய்யாரமாய் கால் நீட்டி அமர்ந்து, ஆவிப்பறக்கும் ஏலக்காய் தேநீரைப் பருகிக் கொண்டிருக்கும் கணவன் எதிரில் நின்று வினவினாள்.
“டீ…” அவன் வாய் திறக்க,
வலது கரத்தை விரித்து அவன் முகமருகே நீட்டியவள்,
“சாப்பிடும் போதுதான் பேசக்கூடாது! குடிக்கும்போது பேசலாம்!” கட்டளையாக உரைத்து கண்களை உருட்டினாள்.
தன்னையும் அறியாமல் மனத்தில் இருந்ததை எல்லாம் வாய்விட்டுப் புலம்பிய பேதையின் மனம் லேசாக, குறும்பும் எட்டிப்பார்த்திருந்தது.
இயல்பு நிலைக்குத் திரும்பிய மனையாளின் மாற்றத்தில் இதழ்கள் விரிய சிரித்தவன், அவளைத் தன்னருகே உட்காரச் செய்து, நடந்த அத்தனையும் விவரித்தான்.
“கீர்த்தனா சொன்ன யோசனையில் எனக்கு மட்டுமில்ல, உன் தம்பிக்கும் சுத்தமா இஷ்டமில்ல. ஒன்றுக்கு இரண்டு குழந்தைகளைச் சுமக்குற அவள் பலவீனமான உடல் நலனைப் பற்றி மருத்துவர்கள் பட்டியலிட்ட பின்விளைவுகளை மனசுல வச்சுட்டு தான் நாங்க ரெண்டு பேரும் அவளுக்குச் சம்மதம் சொன்னா மாதிரி நடிச்சோம்.” மனம்திறந்து ஒப்புக்கொண்டவன், அவர்கள் தீட்டிய ரகசியத் திட்டங்களை விவரிக்க,
கண்கொட்டாமல் கேட்டவளுக்கு, மனத்தை அழுத்திய பெரும் பாரம் குறைந்தது போலிருந்தது.
“மாமனும் மச்சானும் இத்தனை கள்ளாட்டம் ஆடிருக்கீங்க. என்னைப் பற்றி கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தீங்களா?” அவன் கன்னத்தைக் கிள்ளி செல்லமாக அதட்டினாள்.
“யோசிக்காம இல்லம்மா…” அவன் இழுக்க,
“என்ன யோசிச்சீங்க விக்கிபா? குழந்தைகள் பிறந்து மூணு மாசமாகியும், இன்னும் அவளுக்குத் தான் சப்போர்ட் செஞ்சிட்டு இருக்கீங்க!” சண்டைக்கு வந்தாள்.
“ரிஷிகிட்ட பேசினேன் காயுமா… கீர்த்திக்கு ஏதோ…” கண்கள் மூடி யோசித்தவனுக்கு ரிஷிகுமார் குறிப்பிட்டிருந்த மருத்துவ பிரச்சனை நினைவில் வராமல் போக,
“…நீ இன்னைக்கு செஞ்ச கலாட்டாவுல, என்ன ஆனாலும் பரவாயில்ல, கீர்த்திகிட்ட நேரடியா பேசிடலாம்னு இருந்தேன்; ஆனால் ரிஷி ஊருல இல்லாத சமயத்துல பேசுறது சரியில்லன்னு அந்த எண்ணத்தை கைவிட்டேன்…”
இடைநிறுத்தியவன், மீண்டும் தங்கையை முன்னிறுத்தி பேசிவிட்டதை உணர்ந்து, தயக்கத்துடன் அவளை ஏறிட்டான்.
“கீர்த்திக்கு என்ன ஆச்சு?” கவலை தோய்ந்த குரலில் வினவினாள் காயத்ரி.
அவள் அக்கறையில் நெகிழ்ந்தவன், கைப்பேசியில் ரிஷிகுமார் அனுப்பியிருந்த குறுஞ்செய்திகளை அலசி ஆராய்ந்து,
“…ஹான்! கீர்த்திக்கு போஸ்ட் பார்டம் டிப்ரெஷன்னு சொன்னான்.”
வெள்ளந்தி மனம் படைத்தவன், மச்சான் அனுப்பிய மற்ற குறுஞ்செய்திகளையும் பவ்வியமாக வரிக்கு வரிப் படித்துக்காட்ட,
அதைக்கேட்டவள் பக்கென்று சிரித்துவிட்டாள்.
“ஏன் டி சிரிக்குற?” செல்லமாகக் கோபித்துக்கொண்டான் விக்ரம்.
“உங்க மச்சான் ஏதேதோ சொல்லி உங்க தலையில் மிளகாய் அறைக்குறான். நீங்களும் அதை நம்பி, என் தலையில் ஊறுகாய் போடுறீங்க!” மேலும் கலகலவெனச் சிரித்தாள்.
அவள் பேச்சில், உள்குத்து இருக்கிறதா என அவன் யோசிக்க,
“இருந்தாலும் என் தம்பியை நெனச்சா ரொம்பப் பெருமையா இருக்கு விக்கிபா!” எனப் பூரித்தாள்.
அவள் பேச்சு செயல் எதுவுமே விக்ரமுக்கு விளங்கவில்லை.
“கல்யாணமே வேண்டாம்னு சொன்னவன், கீர்த்தனாவின் உடல்நலத்தில் எவ்வளவு கண்ணும் கருத்துமாய் இருக்கான். பெண்கள் கருவுற்றாலே ஒரு தனி மவுசுதான் இல்ல… எத்தனை கவனிப்பு, காதல், சலுகைகள்…” பூரித்த குரல் ஏக்கத்தில் சரிந்தது.
அதைக் கண்டுகொண்ட விக்ரமின் மனம் குற்றவுணர்வில் கனத்தது.
மனைவியின் தோள்சுற்றி தன்னோடு இறுக அணைத்துக்கொண்டான். அந்த அணைப்பில் அவளுக்கான தன் அன்பை உணர்த்த விழைந்தான். அதை உணர்ந்த பெண்மனமும், அவன் தோளில் ஆதுரமாய் தலைசாய்த்தாள்.
“நீ சொன்ன சிகிச்சைகளுக்கு ஒத்துழைக்காததுக்கும், உன்கிட்டேந்து விலகி இருக்கறதுக்கும் காரணம் இருக்கு காயுமா.
ஒன்றுக்கு இருமுறை கருத்தரித்து, அது கலைந்து போனபோது, உடலாலும் உள்ளத்தாலும் நீ பட்ட அவஸ்தைகள் இன்னும் என் கண்முன்னே நிழலாடுது. உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டோமேன்னு நான் வருந்தாத நாளே இல்லை. அதுக்கு அப்புறம் உன்னை நெருங்கவே பயமா இருந்துது. என்னுடைய சலனத்தால், உன்னை மறுபடியும் அதே நிலைமையில் தள்ளிடக்கூடாதுன்னு ரொம்ப கவனமா இருந்தேன்.
இந்த வலி எல்லாம் தாய்மைக்கே உரிய இயல்பான விஷயங்கள்னு நீ ஏதேதோ சொல்லி எனக்கு மூளைச்சலவைசெஞ்சு, செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சைகளுக்கு அழைச்சிட்டுப் போன. ஆனால் அங்க அவங்க சொன்னதை எல்லாம் செய்ய எனக்கு எவ்வளவு அருவருப்பா இருந்துது தெரியுமா.
சிகிச்சைன்ற பேருல மனைவியான உன்கிட்ட மட்டும் தோன்றும் உணர்வுகளை, இயந்திரங்களுக்கும், போலி உருவங்களுக்கும் என்னால காட்ட முடியலடி.
தாயா, தாரமா, குழந்தையா எல்லாமுமாம் இருக்கும் நீ மட்டும் எனக்குப் போதும் காயுமா.
நீ விக்கிபான்னு கூப்பிடுறதும், நான் உன்னை காயுமான்னு கூப்பிடுறதும் தற்செயலா வந்த பழக்கமா இருந்தாலும், நம்மளுடைய இந்த அழைப்பிலேயே பத்து பிள்ளைகளுக்கு அப்பா அம்மா ஆன உணர்வு கிடைக்குது.” தேக்கிவைத்த மனப்போராட்டங்களை ஒரே மூச்சாகக் கொட்டித் தீர்த்த நிம்மதியில்,
“எனக்கு நீ உனக்கு நான்னு வாழலாம் சரியா?” என அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான்.
இச்சமயம் குற்றவுணர்வில் தத்தளித்தது அவள்.
அவன் முகம்பார்க்க நிமிர்ந்தவள், “எனக்காக யோசிச்ச உங்க மனசை புரிஞ்சுக்காம விவாகரத்து அது இதுன்னு ஏதேதோ பேசி உங்களைக் கஷ்டப்படுத்திட்டேன் விக்கிபா.” கண்ணீர் மல்க வருந்தினாள்.
“இல்லம்மா! இத்தனை வருஷத்துக்கு அப்புறமும் நீ அதை நினைவில் வச்சு பேசுறேன்னா, உனக்கு அது எவ்வளவு வலியைத் தந்திருக்கும்னு என்னால புரிஞ்சுக்கு முடியுது; ஆயிரம் காரணங்கள் சொல்லி நியாயப்படுத்தினாலும், நான் செஞ்சது தவறுதான்.” என அவள் முகவாயை ஏந்தியவன்,
“…ஆனால், ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தறேன் காயுமா. என் உலகம் என் காயத்ரி மட்டும்தான்; யாருக்காகவும் எதுக்காகவும் என் மனைவியை விட்டுக்கொடுத்துடக் கூடாதுன்னு அந்த நொடியே மானசீகமா முடிவெடுத்துட்டேன். அதைக் கடைப்பிடிச்சிட்டு வரேனும் நம்பறேன்.
நமக்குள்ள எப்பேர்ப்பட்ட மனஸ்தாபம் வந்தாலும், என்னை நிக்க வச்சு கேள்வி கேளு; முகத்துக்கு நேர சண்டை போடு. ஆனால் இனி எந்தச் சூழ்நிலையிலும் அதைக் குத்திக்காட்டி என் காதலை கொச்சைப்படுத்தாதே மா!” கெஞ்சலாக அவன் கேட்க,
“ம்ம்…பிராமிஸ்!” கண்ணீர் மல்க அவன் கரத்தில் கரம் பதித்தவள்,
“நீங்களும் எனக்காக ஒண்ணு செய்வீங்களா விக்கிபா?” என்றாள் வாஞ்சையாக.
“ம்ம்…”
“நம்ம அன்பை மெச்சி, கடவுளா பார்த்து பிள்ளைவரம் கொடுக்கட்டும்; இல்லேன்னா இதுதான் நம்ம வாழ்க்கைன்னு நிதர்சனத்தை ஏத்துக்கிட்டு வாழுவோம். சரியா?” முயற்சிகளைக் கைவிட வேண்டாம் என்று மன்றாடினாள்.
“சரின்னு சொல்லி உன்னை ஏமாத்த விரும்பல காயுமா; யோசிக்க கொஞ்சம் அவகாசம் கொடு.” வெளிப்படையாகப் பேசியவன்,
“அதுக்குமுன்னாடி, உனக்கு என்மேல நம்பிக்கை இருந்தால், லண்டன் போயிட்டு வா!” முடிவை அவளிடமே விட்டான்.
காதலும் ஊடலும் உன்னோடு மட்டும்தான்,
காயத்ரி மந்திரத்தை உச்சரித்தான் அவன்;
விடியும் பொழுதுகள் உன் முகம் பார்த்துதான்,
விக்ரமின் வேதாளமாக ஒட்டிக்கொண்டாள் அவள்;
நிஜம் எது நிழல் எது தெளிந்த மனங்கள்,
நிதர்சனங்களை ஏற்று நீடுழி வாழுமா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்…


Please Comment Here