ஓம் ஸ்ரீ சாயிராம்
183 hits
பச்சிளம் குழந்தையின் ஸ்பரிசத்தில் மதிமயங்கி,
பொழுதுக்கும் சீராட்டிப் பாலூட்டித் தாலாட்டி,
புளகாங்கிதப் பெருவெள்ளத்தில் மூழ்கிய மங்கை,
பிரியாவிடை தந்தாளா? சுவீகாரம் கேட்டாளா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள் அத்தியாயம் 10ல்…
நான்கு மணி நேரம் என்பது இருபத்து நான்கு மணி நேரமென மாறியிருந்தது.
குழந்தைகளுக்குப் பசியாற்றுவதைத் தவிர கீர்த்தனாவிற்கு வேறெந்த வேலையும் இருக்கவில்லை என்று சொல்லும் அளவிற்கு, குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, சீவிச் சிங்காரிப்பது, அவர்களுடன் விளையாடுவது, மாலை நேரங்களில் பூங்காவிற்கு அழைத்துச் செல்வது, உறங்கவைப்பது என அனைத்தையும் காயத்ரியும் விக்ரமும் போட்டிபோட்டுச் செய்து வந்தனர்.
அன்றும் அப்படித்தான். கீர்த்தனாவுடன் பணியாற்றி வந்த கேத்தரினின் மகள் ஆனாவின் பிறந்தநாள் விழாவிற்குப் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தனர்.
பயத்தம் மாவு, மை டப்பா, பவுடர், லோஷன் என விக்ரம் ஒவ்வொன்றாகத் தரையில் பரப்பி வைக்க, யாழினிக்கு உச்சிமுதல் பாதம்வரை சூடு பறக்க நல்லெண்ணெய் தேய்த்து முடித்த காயத்ரி,
“அத்தை யாது பாப்பாவுக்கும் ஆயில் மஸாஜ் தந்துட்டு அஞ்சே நிமிஷத்துல வந்து உன்னைக் குளிப்பாட்டுவேனாம். அதுவரைக்கும் யாழிகுட்டி மாமாவோட சமத்தா விளையாடிட்டு இருப்பாளாம்.” கொஞ்சியபடி குழந்தையை விக்ரம் மடியில் விட்டாள்.
விக்ரம் அணிந்திருந்த ஜீன்ஸ் உறுத்தியதில், மறுகணமே கண்களைச் சுருக்கிச் சிணுங்கினாள் யாழினி. சமாதானம் செய்ய முயன்றவன், குழந்தையைக் கண்பார்க்கத் தூக்க, எண்ணெய் பிசுபிசுப்பின் உபயத்தால் அவன் கையிலிருந்து நழுவி நழுவிச் சறுக்கி, அசௌகரியத்தில் மேலும் முனங்கினாள்.
“அவளுக்குக் கசகசன்னு இருக்குப்போல விக்கிபா. குப்புறப் படுக்க வச்சு விளையாட்டுக் காட்டுங்க.” காயத்ரி ஆலோசனை சொல்ல, அவனும் அப்படியே செய்தான்.
பூனை பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்த பதுமை, மெல்ல மெல்ல உடம்பைத் தேய்த்தபடி உருண்டு, தன் குட்டிக்கைகளுக்குள் அடங்கிய காயத்ரியின் புடவையை இழுத்து, “ஆன் ஊ” என இசைத்தாள்.
“தங்கத்துக்கு என்ன வேணும்?” காயத்ரி பேச்சுக்கொடுக்க,
தலையை நிமிர்த்திய குழந்தை, ஜவ்வாக ஊற்றெடுத்த ஜொள்ளு முத்துக்குளைச் சிந்தியபடி மழலையில் மொழிந்தும், பொக்கை வாய் காட்டி இளித்தும் அவள்மேல் ஏறிக்கொள்ள பரபரத்தாள்.
குழந்தையின் செயலில் நெகிழ்ந்த கீர்த்தனா, “சாருமா! யாழினி தானாவே தலையைத் தூக்கி அண்ணியைக் கூப்பிடுறா பாருங்க.” துள்ளி குதித்தாள்.
கீர்த்தனா செய்த ஆர்ப்பாட்டத்தில் சமையலறையில் இருந்து ஓடி வந்த சாரதாவின் முகத்திலும் பூரிப்பு தாண்டவமாடியது.
குழந்தையின் கன்னத்தை வழித்து திருஷ்டி எடுத்து, “அ…த்…தை…அத்தைன்னு சொல்லு யாழிமா.” என சாரதா குழந்தையிடம் நீட்டி முழக்கி வாயசைத்துக் காட்ட,
காயத்ரியின் தோளில் ஒய்யாரமாய் சாய்ந்த யாழினியோ, பாட்டியைச் சற்றும் லட்சியம் செய்யாமல், சுவாரசியமாகப் புடவையைக் கடித்து நனைத்துக் கொண்டிருந்தாள்.
“சாருமா! நீங்க டீச்சர்ன்னு ஒத்துக்கறேன். அதுக்காக மூணு மாச குழந்தைக்கு மூணாம் க்ளாஸ் பாடம் எடுத்தால் நியாயமா?” கீர்த்தனா கேலி செய்ய,
“முதல் வார்த்தை அத்தைன்னு சொன்னால் ஐஸ்வரியம்னு சொல்லுவாங்கடி!” உதட்டைச் சுழித்தார் சாரதா.
“காயுமா! குழந்தையைக் கீழே விடு; யாழிகுட்டி மறுபடியும் தலையைத் தூக்கி உன்னைக் கூப்பிடும்போது வீடியோ எடுக்கறேன்!” யோசனை சொன்னான் விக்ரம்.
“ஃபோட்டோ எடுக்கலாமான்னு உங்க மாமியார்கிட்ட முதல்ல கேளுங்க.” ஏளனமாக உரைத்த காயத்ரி, குழந்தையின் உச்சியில் முத்தமிட்டு இறுக அணைத்துக்கொண்டாள்.
வந்ததிலிருந்து பெயருக்குக் கூடக் குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்க்காததில், அன்னையின் கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகளை நினைவுகூர்ந்த காயத்ரி அவ்வாறு எச்சரித்திருந்தாள்.
“என்னை ஏன்டி வம்புக்கு இழுக்குற? குழந்தைகள் பிறந்த அடுத்த நிமிஷத்துலேந்து உன் தம்பி ரெண்டு பேரையும் வளைச்சு வளைச்சு ஃபோட்டோ எடுத்துட்டு இருக்கான்.” சாரதா எகிற,
“என்னம்மா சொல்ற?” வியந்த காயத்ரியின் விழிகள் தன்னிச்சையாக வரவேற்பறையின் சுவர்களைத் அளந்தது.
“நீங்க ரெண்டு பேரும் குழந்தைகளைக் கண்ணால் பார்க்கும்வரை எதையும் ப்ரிண்ட் போடக்கூடாதுன்னு உன் நாத்தனார் அவன் கையைக் கட்டிப் போட்டு வச்சிருக்கா,” புரியாமல் விழிக்கும் மகளுக்குப் பதிலளித்த சாரதா,
“அதுமட்டுமா…” இழுக்க,
மாமியாரின் அருகில் ஓடி வந்து ஒட்டிக்கொண்ட கீர்த்தனா, “அதெல்லாம் எதுக்கு சாருமா?” எனத் தடுத்தாள்.
சாரதாவோ விடுவதாக இல்லை.
“சும்மா இரு டி!” என அவள் கைகளை உதறிவிட்டவர், சீமந்தம், வளைகாப்பு என எந்தச் சடங்கையும் செய்துகொள்ளாத கீர்த்தனாவின் பிடிவாதங்களை மடை திறந்த வெள்ளமென கொட்டித்தீர்த்தார்.
வெளிர்ந்த முகமாகக் குற்றவுணர்ச்சியில் தத்தளித்த காயத்ரியின் கண்களைத் துடைத்துவிட்ட கீர்த்தனா,
“விடுங்க அண்ணி! இனி தினம் தினம் கொண்டாடிடலாம். பல்லுமுளைக்கிறது, தவழறது, முட்டிப்போடுறதுன்னு ஒவ்வொரு நாளும் விமர்சியா கொண்டாடி ஜமாய்ச்சிடலாம்…” ஆறுதலாகப் பேசிக் கண்சிமிட்ட,
“நமக்குள்ள இருக்கும் மனஸ்தாபங்கள் மறைஞ்சிடும்; ஆனால் இந்த ஸ்பெஷல் மொமென்ட்ஸ் தேடினாலும் திரும்ப வராதுன்னு, நான் கம்பெல் பண்ணி ஃபோட்டோ எடுத்தது சரிதானே ரித்தி?”
வளவளவென வாயடித்துக் கொண்டிருந்த மனைவியைப் பின்னாலிருந்து வளைத்து அணைத்து இன்பதிர்ச்சி தந்தான், ஊரிலிருந்து திரும்பிய ரிஷிகுமார்.
“ரிஷி! நீ எப்போ டா வந்த?” கீர்த்தனாவின் கண்கள் காதலில் மின்ன,
“உன் மாமியார் உன்னைப் பற்றி வண்டி வண்டியா புகழாரம் பாடும்போதே வந்துட்டேன்.” நமுட்டுச் சிரிப்புடன் அன்னையை ஏறிட்டவன், தன் இரு செல்வங்களையும் ஒரே நேரத்தில் தூக்கி முத்தங்களை வாரி இறைத்தான்.
“வெளிய போயிட்டு வந்தா, கை கால் சுத்தம் செஞ்சுட்டு குழந்தைகளைத் தூக்குன்னு உனக்கு எத்தனைமுறை சொல்றது?” பதறிய சாரதா, அவனிடமிருந்து குழந்தைகளை வாங்க எத்தனிக்க,
குழந்தைகளைத் தர மறுத்தவன், அவர்கள் முகம் பார்த்துப் பேச ஏதுவாய் வளைத்துக்கொண்டு, “ஓய் அழுக்கு மூட்டைஸ்! நீங்க என்னமோ சுத்தமா இருக்குறா மாதிரி, பாட்டி என்னைத் திட்டுறாங்க பாருங்க டா!” என அவர்களின் நெற்றியில் முட்டினான்.
குழந்தைகள் இருவரும் வெகு நேரமாக எண்ணெயில் ஊறிக்கொண்டு இருப்பது சாரதாவிற்கு நினைவுக்கு வர,
“மசமசன்னு நிக்காம, குழந்தைகளைக் குளிப்பாட்டுற வழியப் பாருடி!” காயத்ரியை அதட்டினார்.
“சாம்பிராணி போட்டு வை மா!” அன்னைக்கு நினைவூட்டி, தம்பியிடமிருந்து யாழினியை வாங்கியவள்,
“அந்தப் பயத்தம் மாவு கிண்ணத்தை எடுத்துட்டு, அப்படியே யாதவனைத் தூக்கிட்டு வாங்க விக்கிபா!” கணவருக்குக் கட்டளையிட்டு ஓய்வறையை நோக்கி வேகநடை இட்டாள்.
யாதவனைத் தூக்கிக்கொண்ட விக்ரமும் பவ்வியமாக அவளைப் பின்தொடர்ந்தான்.
குழந்தைகளுடன் ஐக்கியமான மகளையும் மாப்பிள்ளையையும் கண்ட சாரதாவின் முகம் நெகிழ்ச்சியில் மலர்ந்தது. குழந்தைகள் மீது அவர்கள் பொழியும் அன்பையும் பாசத்தையும் மெச்சி, கடவுள் அவர்களுக்குப் பிள்ளைவரம் தரவேண்டும் என மானசீகமாகப் பிரார்த்தித்தபடி அடுப்பறை நோக்கி நகர்ந்தார்.
உரிமையும் பாசமும் முட்டிமோதிய அவர்களின் செயலைக் கண்குளிர பருகிய கீர்த்தனா, தங்கள் திட்டத்தை அவர்களிடம் சொல்ல வேண்டிய சரியான தருணமென ரிஷிக்கு நினைவூட்டினாள்.
“சொல்லிடலாம் ரித்தி. அதுக்கு முன்னாடி, நீ ஒரு விஷயம் முடிவு செய்யணும்.” எனப் பீடிகையுடன் தொடங்கி அறைக்குள் அழைத்துச் சென்றவன், அவளையும் இந்தியாவிற்குப் போகுமாறு கூறினான்.
“என்னடா சொல்ற?” கவலையில் தோய்ந்தது கீர்த்தனாவின் முகம்.
சாரதாவிற்கு நிராகரிக்கப்பட்ட விசா நீட்டிப்பைப் பற்றி அறிவித்தான்.
“அதான் கேத்தி, ரங்கன் எல்லாரும் பக்கத்துல இருக்காங்களே!” நண்பர்களின் பெயரைப் பட்டியலிட்டாள் அவள்.
“ம்ப்ச்….அவசரத்துக்கு உதவி கேக்குறதுக்கும், நித்தியம் உதவி கேக்குறதுக்கும் வித்தியாசம் இருக்கு மா.” பொறுமையாக எடுத்துரைத்தவன் தன் திட்டத்தை விவரித்தான்.
“டிரான்ஸ்ஃபர் தரலேனாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் லண்டன்-இந்தியா ரூட்டில் ஸ்கெட்யூல் போட்டுத் தரச் சொல்லிக் கேட்டேன். அவங்களும் சம்மதிச்சுட்டாங்க. அதனால இனி எனக்கு ஹால்ட் இந்தியாவிலும் லண்டனிலும் மட்டும்தான் இருக்கும். இந்தியாவிற்கு வரும்போது உங்களோட இருந்துட்டு அப்படியே புது வேலையும் தேடிப்பேன்.” என்றான்.
“இருந்தாலும் உன்னை விட்டுட்டு எப்படிடா இருப்பேன்,” பேதையின் கண்கள் குளமாக,
அவளை ஆதுரமாய் அணைத்தவன், “வேற எந்த ஊருக்குப் போனாலும் இதே நிலைமைதானே ரித்தி மா?” தன் பணியின் இயல்பை நினைவூட்டினான்.
“ஸ்டில்ல் ஐ வில் மிஸ் யூ ரிஷி!” கீர்த்தனா அவன் மார்பில் முகம் புதைத்துச் சிணுங்க,
குழந்தைகளைக் கமகமவென குளிக்கவைத்து, ஆளுக்கொரு குழந்தை எனத் தூக்கிக்கொண்டு வந்தனர் காயத்ரியும் விகர்மும்.
“அடேய், இன்னும் குளிக்கப் போகாம உன் பொண்டாட்டியோட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க?” தம்பியின் தோளில் செல்லமாக அடித்தாள் காயத்ரி.
விறுவிறுவெனக் கண்களைத் துடைத்துக்கொண்ட கீர்த்தனா அவனிடமிருந்து விலகி நிற்க,
“என்னடி ஆச்சு உனக்கு? அவன் ஏதாவது சொன்னான்னா?” தம்பியைக் கண்களால் மிரட்டி, கீர்த்தனாவின் தலையை மென்மையாக வருடினாள் காயத்ரி.
மனைவியைத் தன்பக்கம் இழுத்துக்கொண்ட ரிஷிகுமார், “என் பொண்டாட்டி போஸ்ட் பார்டம் டிப்ரெஷன்ல அழறா அக்கா. நீ என் பிள்ளைகளை நாலு மணி நேரம் பார்த்துண்டா, நான் என் மனைவியைச் சமாதானம் செஞ்சிடுவேன்.” நமுட்டுச் சிரிப்புடன் பதில்சொல்ல,
தம்பியின் காதல் மொழிகளை ரசித்த காயத்ரியின் இதழ்களும் புன்னகையில் விரிந்தன.
“நாலு மணி நேரம் என்ன? நாள் முழுக்கவும் பார்த்துக்க நான் தயார். ஆனால் அதுக்கு முன்னாடி உன் பொண்டாட்டியைக் குழந்தைகளின் பசியாற்றச் சொல்லு.” அவளும் தம்பிக்கு இணையாக வம்பு செய்ய,
அதில் கீர்த்தனாவின் கோபம் உச்சியைத் தொட்டது.
ரிஷிகுமாரின் கரங்களை உதறி, அண்ணனிடம் ஒட்டிக்கொண்டவள்,
“நானும் என் குழந்தைகளும் உங்களோட சென்னைக்கு வரோம் ‘ண்ணா.” பகிரங்கமாய் அறிவித்தாள்.
காயத்ரியின் முகம் நொடியில் மாற, தலை வால் எதுவும் புரியாமல் விழித்த விக்ரம், “மறுபடியும் ஏதாவது புதுப் பிரச்சனையை ஆரம்பிக்காத கீர்த்தனா! அவங்கவங்க அவங்கவங்க இடத்தில் இருப்போம். அதுதான் எல்லாருக்கும் நல்லது.” அழுத்தமாக உரைத்தான்.
விளையாட்டு விபரீதமாகி விடக்கூடாது என்று சிந்தித்த ரிஷிகுமார், “இது உங்களுக்காக எடுத்த முடிவில்ல மாமா. குழந்தைங்க ஓரளவிற்கு வளருர வரைக்கும், அம்மாவின் உதவி எங்களுக்குக் கட்டாயம் தேவை. ஆனால் அம்மாக்கு விசா நீட்டிக்க முடியல. அதான் நாங்க இந்தியா வந்துடலாம்னு இருக்கோம்.” என்று கூறி, மற்ற விவரங்களையும் பகிர்ந்து விக்ரமின் பதிலுக்காகக் காத்திருந்தான்.
தங்கையா தாரமா எனத் தர்மசங்கடத்தில் தவித்த விக்ரம், பதில் சொல்ல முடியாமல் தயங்க,
“அப்போன்னா மதுரைக்கு வந்துடுங்க!” கம்பீரமாய் உரைத்தாள் காயத்ரி.
அதற்குள் யாதவன் வீல்வீல் என ஊரைக் கூட்ட, “முதல்ல குழந்தைகளைக் கவனி. மற்றதை பிறந்தநாள் விழாவுக்குப் போயிட்டு வந்து பேசிக்கலாம்.” மென்னகையுடன் உரைத்தாள் காயத்ரி.
பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு, தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என அனைவருடனும் சகஜமாய் பேசிப் பழகிய அக்கா மாமாவின் உற்சாகத்தில் உச்சிகுளிர்ந்து போனது ரிஷிகுமாருக்கு. யாதவன், யாழினியுடன் இணைந்து வகைவகையாக போஸ் தந்து ஃபோட்டோ எடுக்கச் சொல்லி தம்பியை நச்சரித்தாள் காயத்ரி.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என விழா நள்ளிரவு வரை நீடித்தது.
வீடு திரும்பியதும் கட்டிப்போடாத குறையாய் காயத்ரியை சோஃபாவில் சிறைசெய்தான் அவள் அருமை தம்பி.
“எங்க ரெண்டுபேரையும் மதுரைக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிருக்காங்க டா!” எனத் தம்பியின் கன்னத்தைக் கிள்ளி, தங்கள் பணியிட மாற்றத்தைப் பற்றி விவரித்தாள்.
“அப்போ சென்னையில் இருந்தா மாதிரியே மதுரையிலும் சேர்ந்தே இருக்கலாம் மாம்ஸ். வீட்டின் அமைப்பு உங்களுக்கும் அக்காவுக்கும் பிடிச்சால் போதும். பதிவு செய்ய ஏற்பாடு செஞ்சிட்டு சொல்லுங்க. நான் புறப்பட்டு வரேன்.” சந்தோஷத்தில் தத்தளித்த ரிஷிகுமார் மடமடவென திட்டங்களைத் தீட்ட,
“மதுரையில் ஒண்ணா இருக்கலாம் ரிஷி. ஆனா ஒரே வீட்டில் இருக்க வேண்டாம்;” திருத்திச் சொல்லி குடியேறுவது பொறுத்தவரை, தங்களுக்கு அலுவலகத்திலேயே ஏற்பாடு செய்திருப்பதாகத் தகவல்களைப் பகிர்ந்த விக்ரம், ரிஷிகுமார் குடும்பத்துடன் வசிப்பதற்கு ஏதுவாய் அந்தப் பகுதியிலேயே வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்வதாகவும் அறிவித்தான்.
“ஏன் மாம்ஸ்! அதான் இப்போ எல்லாம் சரியாகிடுத்தே!” ரிஷி சலித்துக்கொள்ள,
“இனி இவங்க ரெண்டு பேரையும் நம்பி எந்தத் திட்டமும் போட, நான் தயாரா இல்லடா.” எனப் பெண்கள் இருவரையும் ஏறிட்டபடி மச்சானுக்குப் பதில் சொன்னான் விக்ரம்.
“ரொம்பத்தான்!” என காயத்ரி கண்களை உருட்டி உதட்டைச் சுழிக்க, எந்தவித எதிர்வினையும் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் கீர்த்தனா.
“பயப்படாதீங்க மாமா!” ரிஷிகுமார் கெஞ்ச,
“மாப்பிள்ளை சொல்றது சரிதான் ரிஷி. ஊர் கண்ணே படுறா மாதிரி நம்ம எல்லாரும் ஒரே வீட்டுல இருந்ததுனால தான் என்னென்னமோ நடந்திருத்து. இனியும் அந்தமாதிரி எதுவும் நடக்கக் கூடாதுன்னா, ரெண்டு அடி தள்ளி இருந்து, நாள் கிழமையில் சந்திச்சுக்கறது தான் நம்ம எல்லாருக்கும் நல்லது.” சாரதா தன் ஆதங்கத்தைக் கூறினார்.
அதைக்கேட்டு கலகலவெனச் சிரித்த ரிஷிகுமார்,
“ரித்திமா! உன் மாமியாரையும் அண்ணனையும் பாரேன்! சம்சாரம் அது மின்சாரம் லக்ஷ்மி ரேஞ்சுக்கு வசனம் எல்லாம் பேசி சிரிப்புமூட்டுறாங்க!” எனக் கேலி செய்து,
“அப்படியெல்லாம் எதுவும் நடக்காது; நாம எல்லாரும் ஒரே வீட்டுல சந்தோஷமா இருக்கலாம்னு எடுத்துச்சொல்லுமா” என்றான்.
“ஏதோ எல்லாம் என்னைக் கேட்டு முடிவு பண்ணறா மாதிரி பேசுற!” தேக்கிவைத்த வருத்தத்தை எல்லாம் வார்த்தைகளில் கொட்டினாள் கீர்த்தனா.
தன் முடிவுதான் தங்கையின் அதிருப்திக்குக் காரணமோ எனப் பயந்த விக்ரம், “நம்ம எல்லாருடைய நல்லதுக்கும் தான் தனி தனி வீடு பார்க்கலாம்னு சொல்றேன் கீர்த்திமா.” குழைய,
“யோசிக்காமல் பேசுவானேன்; பின் வருந்துவானேன்;” எனக் கணவன் செவியில் கிசுகிசுத்தாள் காயத்ரி.
“உன்மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லண்ணா.” பனித்த கண்களுடன் தன்னவனைச் சுட்டெரித்தாள் பாவை.
அவள் வருத்தத்தின் உண்மை காரணத்தை நொடியில் உணர்ந்தான் ரிஷிகுமார். விழாவிலும் சரி, வீட்டிலும் சரி, அவள் யாரிடமும் பேசாமல் விலகி இருந்ததும் ஏன் என்று புரிந்தது.
“கொஞ்ச நாள்தான் ரித்திமா. மாசத்தில் ஒரு வாரமாவது இந்தியாவில் இருக்குறா மாதிரி பார்த்துக்கறேன். யாது யாழிகுட்டி முதல் பிறந்தநாளுக்கு முன்னாடி இந்த நாடோடி வாழ்க்கைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கண்டுபிடிச்சிடலாம் சரியா.” ரிஷி தன்மையாக எடுத்துரைக்க,
“ம்ஹூம்! மாசத்தில் பத்து நாளாவது என்னோட இந்தியாவில் இருப்பேன்னு பிராமிஸ் பண்ணு ரிஷி.” இமையோரம் பளபளத்த விழிநீருடன் உள்ளங்கையை விரித்துக் காத்திருந்தாள்.
தாரகையின் முகத்தை உளமார ரசித்தவன், “சாருமா பிராமிஸ்!” கரம் மேல் கரம் வைத்து அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.
மறுநொடியே மலர்ந்த முகத்துடன் அவள் ரிஷிகுமாரின் தோளில் சாய,
“இதுக்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா?” சலித்துக்கொண்டாள் காயத்ரி.
“வருஷத்துல ரெண்டு வாரத்துக்குக் கூடப் புருஷனைப் பிரிஞ்சு இருக்க முடியாமல் யாரோ மூக்கால அழுதாங்களாம் காயுமா…” விக்ரம் பொடிவைத்துப் பேச,
“ஷு! சும்மா இருங்க விக்கிபா!” முகத்தில் பூத்த வெட்கத்தை மறைக்கிறேன் என்ற பெயரில் அவன் புஜத்தில் கிள்ளி அசடுவழிந்தாள்.
அனைவரின் மனமும் மகிழ்ச்சியில் தத்தளிக்க, இதுதான் சாக்கு என்பதுபோல, “ஒரே வீடு பார்க்கலாமே மாம்ஸ்.” கொஞ்சினான் ரிஷிகுமார்.
“நோ வே ரிஷி! எனக்கும் என் பொண்டாட்டிக்கும் தனி ஸ்பேஸ் வேணும்.” தன்னையும் அறியாமல் விக்ரம் மனத்தில் பட்டதை உரக்கச் சொல்ல, காயத்ரியின் முகம் இரண்டு மடங்காய் சிவந்தது.
“போதும் போதும் மாம்ஸ். இதுக்குமேல ஜொள்ளு விட்டீங்கன்னா, நாங்க எல்லாரும் கண்ணை மூடிக்க வேண்டியதா இருக்கும்.” ரிஷி விடாமல் கலாய்த்தான்.
“அட பப்ளிக்கா காதலிக்கலாம்; அடி வாங்க முடியாதுன்னு சொல்ல வந்தேன் டா!” விக்ரம் சமாளிக்க, மீண்டும் அவன் புஜத்தில் நறுக்கென்ற கிள்ளல் ஒன்றை பரிசாய் தந்தாள் அவன் சரிபாதி.
தூக்கம் கலைந்த யாதவன் தொட்டிலில் இருந்து குரல் கொடுக்க, விருட்டென எழுந்த கீர்த்தனா,
“சரி சரி! எத்தனை வீடு வேணும்னாலும் பாருங்க ‘ண்ணா. ஆனால் ரிஷி நிரந்தரமா ஊருக்கு வரும்வரை நாங்க எல்லாரும் உங்களோடத்தான் இருப்போம்.” கறாராக உரைத்து,
“சாருமா உங்களுக்கும் நோ சாய்ஸ். மாப்பிள்ளை வீட்டில் வந்து தங்க மாட்டேன் அது இதுன்னு ஏதாவது சொன்னீங்கன்னா அவ்வளவுதான்!” மாமியாரின் முகத்திற்கு எதிரே ஒற்றை விரலை ஆட்டி மிரட்டினாள்.
“என்ன கீர்த்தி விளையாட்டு இது? பெரியவங்க கிட்ட இப்படியா பேசுறது?” விக்ரம் கண்டிக்க,
“இதுல என்ன இருக்கு மாப்பிள்ளை.” என மென்மையாகப் புன்னகைத்த சாரதா, கீர்த்தனாவைத் தன்னருகில் இழுத்துக்கொண்டு,
“உன்னையும் உன் பிள்ளைகளையும் தனியாளா மேய்க்க எனக்கும் தைரியமில்லடி மருமகளே!” என அவளுக்கு இணையாகக் கிண்டல் செய்ய,
“சாருமா!!! உங்கள அப்புறம் வந்து கவனிச்சுக்கறேன்!” எனச் செல்லம் கொஞ்சிவிட்டு, பிள்ளைகளைக் கவனிக்கச் சிட்டெனெப் பறந்தாள்.
ரிஷி இல்லாத இடத்தில் கீர்த்தனா வெறுமையை உணர்வாள் என்ற மருமகளின் கள்ளம் கபடமில்லாத சுபாவத்தை மூவருக்கும் நினைவூட்டினார் சாரதா.
அதில் அவள் பாசமும் அடங்கும் என ஒத்தூதிய காயத்ரி, “நானும் கீர்த்தனாவும் மதுரையில் ஒத்துமையா இருந்துட்டா, சென்னைக்குப் போனதும் பழையபடி நம்ம வீட்டில் ஒண்ணா தான் இருக்கணும்.” அழுத்தமாகக் கூறினாள்.
“ம்ம்…பார்க்கலாம்!” விக்ரம் பட்டும் படாமல் பேச,
எத்தனைக்கு எத்தனை முடியுமோ, அத்தனைக்கு அத்தனை புது வேலை கிடைத்து, இந்தியாவிற்கே நிரந்தரமாகச் சென்றுவிட வேண்டும் என யோசித்தான் ரிஷிகுமார்.
விட்டுப் போகும் உறவா இது,
வாய்கிழியப் பேசியும் விவகாரங்கள் பல செய்தும்,
வாஞ்சையாய் காரியம் சாதித்தப் பெண்கள்,
விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்ற,
வாழ்க்கை நியதியை முறிப்பாரா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்…


Please Comment Here