ஓம் ஸ்ரீ சாயிராம்
148 hits
முறைப்பும் முன்கோபமும் ‘வேலை’க்கு ஆகாதென,
முகிலன் அவன் மொழிந்த காதல் போதனைகளை,
முணுமுணுத்தும் முறுவலித்தும் கிரகித்த பெண்ணுள்ளத்தில்,
முகிழ்ந்து வளர்ந்தது பகையா; புரிதலா; – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள் அத்தியாயம் 16…
டெல்லியிலிருந்து காஷ்மீருக்கு இயக்கவிருந்த அந்த நாளின் விமானப் பணியில் தன்னோடு வரவிருக்கும் கேப்டன், சாதனா என்று அறிந்த ரிஷிகுமாருக்கு வியர்த்துப்போனது.
இரண்டு மாதங்களுக்கு முன் தன் பிறந்தநாளன்று ஏற்பட்ட மனஸ்தாபங்களில் வேலையே பறிபோய்விட்டது என்று தான் நினைத்திருந்தான். ஆனால் ஒரே வாரத்தில் அடுத்தப் பணி நியமனம் வர, சாதனா தன் வேலைக்கு உலை வைக்கவில்லை என்று நிம்மதி அடைந்தான்; அதேசமயத்தில் அவன் விண்ணப்பித்திருந்த சிறப்புப் பணிக்கு, சிபாரிசும் செய்யவில்லை என்று அறிந்தவனுக்கு அவளை இன்று நேரில் சந்திக்க தர்மசங்கடமாக இருந்தது.
சாதனாவுக்கும் ஒரு விதமான தயக்கம்தான்.
கணவனுடன் கலந்தாலோசித்ததில் தெளிவடைந்தவள் ரிஷிகுமாரை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தாள் என்றாலும், இன்று நேரம் நெருங்க நெருங்க பதற்றமும் கூடிக்கொண்டே போனது. மன்னிப்புக் கேட்டால் தன்னை இளக்காரமாய் நினைப்பானோ என்ற தன்மானம் அவளை வாட்டியெடுத்தது.
அலுவல் அறையில் இருந்தவரை, சக ஊழியர்களின் உபயத்தால் இருவருக்கும் தனிமையில் பேசிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. விமானி அறையில் (Cockpit) வந்து அமர்ந்ததும், “மன்னிச்சிருங்க மேடம்! அன்னைக்கு என் மனைவி ஏதோ தெரியாம பேசிட்டா!” இமைக்கும் நொடியில் மன்னிப்புக் கேட்டான் ரிஷிகுமார்.
தான் சொல்ல நினைத்ததை அவன் சொல்லி முந்திக்கொண்டானே என்ற ஆச்சரியத்தில் சாதனாவின் கண்கள் விரிய,
“என்னடா இவன், இத்தனை நாளுக்கு அப்புறம் மன்னிப்புக் கேக்குறானேன்னு யோசிக்குறீங்களா மேடம்? அடுத்த வாரமே எனக்கு அசைன்மென்ட் வந்ததும் நீங்க என்னைப் பெருந்தன்மையா மன்னிச்சுட்டீங்கன்னு புரிஞ்சுது. உடனே இமெயில் அனுப்பி மன்னிப்புக் கேட்டு, நன்றிகளையும் தெரிவிச்சிருக்கலாம். ஆனால் நேருல பார்த்துச் சொல்லணும்னு தோணுச்சு. எப்படியும் ஏதாவதுவொரு பயணத்தில் உங்களைச் சந்திச்சிடுவேன்னு ஒரு நப்பாசை. அதான் காத்திருந்தேன்.” அவன் மேலும் விளக்க,
அன்று அலட்சியமாகப் பேசியிருந்தாலும், தன் தவறை உணர்ந்திருக்கிறான் என்று கண்டுகொண்டவளுக்கு அவன்மேல் நல்லபிப்பிராயம் தோன்றவே செய்தது. தங்களுக்குள் நிலவிய பனிப்போரை உடைக்கும் விதமாக அவனே முன்வந்து பேசியதும் அவளுக்குப் பேருதவியாக இருந்தது.
“என் வேலையை சுலபமாக்கிட்டீங்க மிஸ்டர்.ரிஷிகுமார்.” மென்னகையுடன் பெருமூச்சுவிட்டவள்,
“நானும் உங்களை அப்படி மரியாதை குறைவா பேசியிருக்கக் கூடாது. ஐ ஏம் சாரி!” உளமாற மன்னிப்புக் கேட்டாள்.
காண்பது கனவா நனவா என்று புரியாமல் ரிஷிகுமார் விழிக்க,
“எல்லார் முன்னாடியும் சபையில் உங்களை அவமானப்படுத்தி பேசிட்டேன்னு உங்க மனைவிக்கு என்மேல கோபம்…” இடைநிறுத்தியவள்,
“…ம்ஹூம்! கோபம்னு சொல்லக்கூடாது; அது அவங்க உங்கமேல வச்சிருக்க காதலின் வெளிப்பாடு.” என்றவளின் இதழ்கள் புன்னகையில் விரிந்தன.
மனஸ்தாபங்கள் மறைந்தது என்ற ஆனந்தம் அவன் முகத்தில் மின்னிய போதும், விமானத்தை இயக்கத் தயாராகும் நிலையில் மடல்களை(Flaps) பரிசோதனை செய்த ரிஷிகுமாருக்கு அந்த நாள் ஞாபகங்கள் கண்முன் விரிந்தது. இத்தனை கனிவானவள், தன் பெயரை ஏன் பரிந்துரை செய்யவில்லை என்று சிந்தனையில் கரைந்தான். அவன் முகமே அவன் உள்ளத்தைக் காட்டிக்கொடுக்க,
“நீங்க ரொம்பத் திறமைசாலிதான் மிஸ்டர்.ரிஷிகுமார். ஆனாலும் பிரமுகர்களின் சொந்த விமானங்களை இயக்கும் பணிக்கு உங்க பெயரைச் சிபாரிசு செய்ய எனக்கு மனசுவரல.” என்றாள் பீடிகையுடன்.
“எ….என்….என்ன காரணம்னு தெரிஞ்சுக்குலாமா மேடம்.” அவன் திக்கித்திணற,
“ஹோட்டலில் செய்திருந்த ஏற்பாடுகளை உதாசீனம் செஞ்சது என் தப்புதான். ஆனால் விமானத்தில் உங்க மனைவி செஞ்ச எதையும் என்னால ஏத்துக்க முடியல.” தன்மையாகவே பதிலளித்தாள்.
“அதுவும் அவளுடைய காதலின் வெளிப்பாடுதான் மேடம்…” மேலும் பேசலாமா வேண்டாமா என ரிஷிகுமார் தயங்க,
“புரியுது ரிஷி. எதுக்கும் ஒரு நேரம் காலம் இருக்குல!” பொறுமையாகவே பேசினாள் அவள்.
அதில் அவன் தன்னம்பிக்கை கூடியது.
“வேலை நேரத்துல பிறந்தநாள் கொண்டாட நெனச்சது தப்புதான் மேடம். ஆனால் அதனால என் கவனம் சிதறலன்னு உங்களுக்குத் தெரியும் தானே!” அன்று பணி சார்ந்த விஷயங்களில் அவள் மனநிறைவுடன் பாராட்டியதை நினைவூட்டினான்.
அவனுக்கு அந்தப் பணி எவ்வளவு முக்கியம் என்பதை, அவனின் ஆதங்கம் நிறைந்த கேள்விகளிலேயே புரிந்துகொண்டாள்.
“நீங்க கவனம் சிதறாம இருந்தீங்க, ஓகே! ஆனால் உங்க மனைவி செய்த காரியங்களில் எத்தனை பேராப்பதுகள் மறைஞ்சிருந்துதுன்னு, பொறுப்பான ஒரு விமானியா நீங்க யோசிச்சுப் பார்த்தீங்களா?
“கண்கொத்திப் பாம்பு மாதிரி நாம பாதுகாப்பு சோதனைகளை எவ்வளவுதான் பலப்படுத்தினாலும், புதுசு புதுசா யோசிச்சு ஹைஜாக் பண்ணறாங்க. சாப்பிட வசதியா இருக்குமேன்னு நாம கொடுக்குற மெடல் கட்லெரியையும், தண்ணீர் பாட்டிலையும் கூட ஆயுதமா பயன்படுத்துற அளவுக்கு இன்றைய நிலைமை மோசமா இருக்கு.” என்றவள்,
பரிசுப்பொருள் என நாட்குறிப்புடன் சேர்த்து கீர்த்தனா வினியோகம் செய்த எழுதுகோலின் (Hero Pen) கூர்மையான முனையையும், திரவ மையையும் தீய எண்ணம் படைத்தவர்கள் ஆயுதமாகத் துஷ்பிரயோகம் செய்திருக்கக்கூடும் என்றும், பயணிகளின் உடல் உபாதைகளைப் பற்றி முழுவதும் தெரியாமல் இனிப்புப் பண்டங்களை வெளியிலிருந்து வரவழித்து வினியோகம் செய்ததும் பெரும் ஆபத்தான ஒன்று என்றும் விவரித்தாள்.
அவள் சொல்வது அனைத்தும் சாத்தியமே என்றாலும், பின்விளைவுகளை மிகைப்படுத்தி கூறிகிறாள் என்பது போலவே தோன்றியது ரிஷிகுமாருக்கு.
தந்தையின் அகால மரணத்தைக் கண்டு தானும் ஒரு காலத்தில் இப்படித்தானே பிரச்சனைகளைப் பூதாகரமாய் பாவித்து பயந்திருக்கிறோம் எனச் சுயஅலசலில் இறங்கியவனின் இதழோரம் புன்னகை தேங்கியது.
“புரியுது மேடம்! இனி இந்தமாதிரி எதுவும் நடக்காம பார்த்துக்குறேன்.” பணிவடக்கத்துடன் உரைத்தான்.
தான் சொன்ன அனைத்தையும் நேர்மறையாக ஏற்ற அவன் பெருந்தன்மையான குணமே அவளைக் கவர்ந்தது.
“நானும் உங்களைப் பற்றி எந்த எதிர்மறையான ரிப்போர்டும் தரல. உங்ககிட்ட இன்னும் சில விஷயங்களைக் கேட்டு தெளிவுபடுத்திட்டு என் ஃபைனல் ரிப்போர்ட் கொடுக்கறேன்னு ஹோல்ட் தான் பண்ணி வச்சிருக்கேன்.” அவள் அளவாய் சிரிக்க,
“நிஜமாவா மேடம். அப்படின்னா இப்பவே உங்க சந்தேகங்களைக் கேளுங்க மேடம். ஐ ஆம் ரெடி டு ஆன்ஸர்.” உற்சாகம் தலைக்கேற கெஞ்சினான்.
“அதுக்கு அவசியமே இல்ல.” அவள் மேலும் புதிர்போட,
“மேடம்….” வியந்தான் அவன்.
“ஆமாம் ரிஷி. நான் சொன்ன காரணங்களை பக்குவமா எடுத்துக்கிட்ட உங்க குணமே என் சந்தேகங்களை எல்லாம் தெளிவாக்கிடுத்து.” என்றாள் ஆத்மார்த்தமாக.
விமானப் புறப்பாடு நேரமென உணர்ந்தவர்கள், பணியில் கவனத்தைத் திருப்ப மெல்லிய புன்னகை பரிமாற்றங்கள், ஓரிரு வார்த்தை உரையாடக்லகள் என மீதி பயணத்தை மனநிறைவுடன் கடந்தனர்.
அன்று மாலை உணவருந்த வந்த இடத்தில், இருவருக்கு உண்டான உணவு மேஜையில் தனிமையில் அமர்ந்தபடி, உணவுப் பட்டியலட்டையை முன்னும் பின்னுமாக விசிறும் ரிஷிகுமாரை கண்ட சாதனா,
“மே ஐ ஜாய்ன் யூ?” என எதிரே நின்றாள்.
எதிர்பாராத அவள் வரவில் திடுக்கிட்டவன், சம்பிரதாயச் சிரிப்புடன் அமருமாறு பதிலுரைத்து, பட்டியலட்டையை அவளிடம் நீட்டினான்.
அவளோ அதைக் கண்ணெடுத்தும் பாராமல், “ரெட் வைனோட ஆரம்பிக்கலாமா?” என்று புருவங்களை மேலும் கீழும் வளைத்தாள்.
“ஐயோ மேடம், அதெல்லாம் எனக்குப் பழக்கமில்ல…” ரிஷி பதற,
“அப்புறம் எப்படி சீர்ஸ் பண்ணறது?” மேலும் வம்பிழுத்துக் கண்சிமிட்டினாள்.
“தண்ணீர் போதும் மேடம்!” என்றவன் தன் முன்னிருந்த கண்ணாடி டம்ளரை பவ்வியமாக உயர்த்த,
‘ரொம்ப நல்லவன் டா நீ!’ வாய்க்குள் முணுமுணுத்தபடி தன் டம்ளரை லேசாக இடித்து, “சீர்ஸ்!” என்றாள்.
அவள் உதட்டசைவுகள் புரியாமல், “உங்களுக்கு வேணும்னா ஆர்டர் செஞ்சுக்கோங்க.” பம்மினான் அவன்.
“என்னைப் பார்த்தால் குடிகாரி மாதிரி தெரியுதா?” அவள் கண்களை உருட்டியதில் கப்சப் என்றானான்.
அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என யோசித்தவன், அன்று அவள் உண்ட சாண்ட்விச்சை நினைவுகூர்ந்து, அதையே சாப்பிடலாமா என்று வினவினான்.
தன்னைத் தொட்டு மீளும் அவன் பார்வையையும், தந்தியடிக்கும் உதடுகளையும் கண்டுகொள்ளவே செய்தாள் பெண்.
“இத்துப்போன பிரெட் சாப்பிடவா காஷ்மீர் வரை வந்திருக்கோம்!” அன்று கீர்த்தனா ஏசிய பாவனையிலேயே உரைத்தவள், விடுதி ஊழியர் ஒருவரை அழைத்து, ருமாலி ரொட்டி, தம் ஆலு, காஷ்மீரி புலாவ் எடுத்துவருமாறு பட்டியலிட்டவள், பேந்தப்பேந்த விழிக்கும் ரிஷிகுமாரை ரசனையாக ஏறிட்டபடி,
“டெஸ்ஸர்ட்டுக்கு பைனாப்பிள் அப்சைட் டவுன் கேக் எடுத்துட்டுவாங்க.” அழுத்திக் கூறினாள்.
ஊழியர் நகர்ந்த பின்னும் சிலையாக அமர்ந்திருக்கும் ரிஷிகுமாரின் முகத்துக்கு எதிரே சொடுக்கிட்டவள்,
“அதான் அன்னைக்கு ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன்; மன்னிச்சுக்கோங்கன்னு சொன்னேன்ல!” அதட்டாத குறையாக நினைவூட்டினாள்.
“சாரி மேடம்!” அசடுவழிந்தவனின் கவனத்தை அவன் கைப்பேசியின் கூக்குரல் ஈர்த்தது.
அழைப்பது கீர்த்தனா என்று கண்டுகொண்டவன், அழைப்பைத் துண்டித்து, பிறகு பேசுகிறேன் எனக் குறுஞ்செய்தி அனுப்பினான். அதைக் கண்டும் காணாமல் தவிர்த்த சாதனாவால், அக்கைபேசியின் திரையில் மின்னிய இரட்டையர்களின் பளிங்கு முகத்தை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
“உங்களுக்கு இரட்டைக் குழந்தைகளா ரிஷி?” வாய்விட்டே கேட்டாள்.
“ஆமாம் மேடம். மகன் யாதவன்; மகள் யாழினி; இப்போதான் ஃப்ர்ஸ்ட் பர்த்டே முடிஞ்சுது.” என்றவன் பிறந்தநாள் விழாவின் போது எடுத்த புகைப்படங்களையும் காணொளிகளையும் காட்டி உற்சாகம் மின்ன பேசினான்.
இதமான ஒளி விளக்குகள், பலூன் அலங்காரங்கள், மழலை பட்டாளத்தின் ஆடல் பாடல் கொண்டாட்டங்கள் என ஜொலித்த அந்த பிரம்மாண்டமான அரங்கத்தில், உற்றார் உறவினரின் கைகளில் தவழும் குழந்தைகளின் புன்னகையில் கரைந்தவள்,
“ரெண்டு குழந்தைகளில் யாரை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் ரிஷி?” என்றாள்.
‘இது என்ன வம்பாகப் போச்சு?’ மனத்தில் புலம்பியவன், “எனக்கு என் ரெண்டு குழந்தைகளையும் ரொம்பப் பிடிக்கும் மேடம்.” பணிவாகவே பதிலளித்தான்.
“அட யார்மேல அதிக ப்ரியம்னு சும்மா சொல்லுங்க ரிஷி!” சாதனா விடாமல் நச்சரிக்க,
ஏன்தான் புகைப்படங்களைக் காட்டினோம் என்று நொந்துக்கொண்டான் அவன்.
“விளையாட்டுக்கும் என்னால என் குழந்தைகளைப் பிரிச்சுப் பார்க்க முடியாது மேடம்.” அவன் அப்பேச்சைக் கத்தரிக்கவும், பணியாளர் உணவை எடுத்துவரவும் சரியாக இருந்தது.
சம்பிரதாயத்திற்காகச் சாப்பிடும் அவன் அமைதியை அவதானித்துப் புன்னகைத்தவள், “நீங்க ரொம்ப நல்ல அப்பா ரிஷி.” என்றாள் மென்மையிலும் மென்மையாக.
“தாங்க்ஸ் மேடம்!” பட்டும்படாமல் பதிலளித்தவன் சாப்பிடுவதில் மும்முறமாக இருப்பதைப்போல பாவலா செய்ய, அதையும் கண்டுகொண்டாள் பெண்.
“நாம ஏன் பிறந்தநாள் கொண்டாடுறோம்னு சொல்லுங்க ரிஷி?” அடுத்த கேள்வியை இறக்கினாள்.
இடக்குமடக்காகப் பேசும் இவளிடம் வசமாய் மாட்டிக்கொண்டுவிட்டேனே என எண்ணியவன் என்ன சொல்வதென்று புரியாமல் முழிக்க,
“இரட்டைக் குழந்தைகளில் மகனை மட்டும் ஏத்துக்கிட்டு, மகளை நிர்க்கதியா விட்டுட்டுப்போன பாசமான அம்மா அப்பாவுக்குப் பிறந்த அதிர்ஷ்டசாலி நான்.” விரக்தியில் சிரித்தாள் சாதனா.
கேள்வியாக அவளைப் பார்த்தான் ரிஷிகுமார்.
“ஆமாம் ரிஷி. நான் ஒரு அநாதை. நீங்க ஸ்பெஷலா ஃபீல் பண்ணற அதே தேதியில் தான் நானும் பிறந்தேன்.” விசனித்தாள் அவள்.
“மன்னிச்சிருங்க மேடம். உங்க மனவலி புரியாமல் அன்னைக்கு நாங்க ஏதேதோ பேசிட்டோம்” அவன் ஆழ்மனதிலிருந்து உரைக்க,
“இதுல உங்க தப்பு என்ன இருக்கு ரிஷி. எனக்கு இப்படியொரு கசப்பான பிளாஷ்பேக் இருக்குன்னு உங்களுக்கு என்ன ஜோசியமா தெரியும்.” கூறித் தேற்றியவள், “ஆனால் பெத்தவங்களை விட பல மடங்கு அன்பு காட்ட, என் சந்தோஷ் இருக்கான்; உங்க கீர்த்தனா மாதிரியே.” என்று பூரித்தாள்.
அவர்களுடையதும் காதல் திருமணம் என்று நினைவுகூர்ந்தவன், எங்கே எப்படிச் சந்தித்தார்கள் எனக் கனிவாய் கேட்டான்.
“அம்மாவாக, அப்பாவாக, தோழனாக, கணவனாக அனைத்துமானவன் என் சந்தோஷ்.” புகழாரம் பாடியவள்,
“ஒரு மாத குழந்தையாய் நான் காப்பகத்திற்கு வந்தபோது, எனக்குன்னு தனி தொட்டில் கூட இல்லாம, இவனிருந்த தொட்டிலில் தான் விட்டாங்களாம். அவன் பக்கத்துல இருந்தால் நான் பசி தாகம்னு கூட அழமாட்டேனாம். அன்னைக்குத் தொடங்கியது எங்க பந்தம்; இன்னைக்கு வரை கஷ்டம்னா என்னன்னே தெரியாதுன்னு சொல்ற அளவுக்கு என்னைப் பொத்திப்பொத்தி பாத்துக்கறான்.” என்னவன் என்ற இறுமாப்புடன் பேசினாள்.
காப்பகத்தில் வளர்ந்த அவர்கள் இருவருக்கும், விமானத் துறையில் பணியாற்றும் ஆசை எப்படி வந்தது என ரிஷி கேட்டறிய, பின்பு அவன் தன் லட்சியப் பாதையைப் பற்றி விவரிக்க என இருவரும் சகஜமாகப் பேசியபடி உணவை உண்டு முடித்தனர். இரவு வணக்கம் கூறி அவன் நகுர,
“நாளைக்கு மிலிட்டரி ஹாஸ்பிட்டல்ல இரத்ததான முகாம் நடத்துறாங்க. பத்து மணிக்கெல்லாம் வந்துடுங்க ரிஷி.” கட்டளையிடாத குறையாய் அழைத்தாள்.
“நானா…. நான் எதுக்கு…அங்க…” அவன் வார்த்தைகளை கோர்க்க,
“நீங்கதான் டீடோடலர் ஆச்சே!” கலாய்த்தவள், “சீ யூ ஆட் 10 ரிஷி!” அவன் பதிலுக்குக் காத்திராமல் நகர்ந்தாள்.
மறுநாள் காலை, அவளுக்கு முன்பாகவே அங்கு வந்திருந்தான் அவன்.
முகாம் நடத்தும் தன் தோழி மஞ்சரியிடம், ரிஷிகுமாரை அறிமுகம் செய்துவைத்தாள் சாதனா. பெயர், வயது, பிறந்தநாள் என அடிப்படை விவரங்களைக் கேட்டு அவள் நிரப்ப,
“அட! நாம பிறந்த வருடமும் ஒண்ணா இருக்கே!” ரிஷி சொன்ன வருடத்தைக் கேட்டு ஆச்சரியம் கலந்த குரலில் குறுக்கிட்டாள் சாதனா.
‘என்னது! ஒரே வருடமா? இவங்க வயசானவங்கன்னுல நெனச்சேன்…’ ரிஷி மனத்தில் அசைபோட,
“நீங்க ரொம்ப சின்னப்பையன்னு நெனச்சேன் ரிஷி. யூ டோன்ட் லுக் 35 அட் ஆல்!” அவள் உரக்கச் சொல்லியே விட்டாள்.
திருதிருவென முழிக்கும் அவன் விழிகளைக் கூர்ந்து கவனித்தவள், “ஓ! அப்போ நீங்க என்ன ஐம்பது வயசு கிழவின்னு நினைச்சீங்களா?” ஒற்றை விரலைச் சுழலவிட்டு மிரட்டாத குறையாக வினவினாள்.
மனத்தில் நினைத்ததை சொல்லிவிட்டாளே எனத் திடுக்கிட்டவன், “அச்சச்சோ! ஐம்பது எல்லாம் இல்ல மேடம்….ஒரு முப்பத்து எட்டு…..நாற்பது….” என்றான் சமாளிப்பாக.
“ரொம்பச் சிரமப்படாதீங்க ரிஷி. நானும் என் முகத்தைத் தினமும் கண்ணாடியில் பாக்குறேன்!” தன் கன்னத்துச் சுருக்கங்களை வருடி, பாஃப் கட் செய்திருந்த கருப்பு வெள்ளை முடியையும் காதுக்குப் பின்னே தள்ளிவிட்டுக்கொண்டாள்.
“நிஜமாத்தான் மேடம்….” ரிஷி அசடுவழிய,
இவர்கள் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த மஞ்சரி,
“நரைமுடியை டை அடிக்காம ஏற்கனவே என் நண்பி கிழவி மாதிரி இருக்கா. இதுல நீங்க வேற என்ன ரிஷி, மேடம் ஆன்ட்டின்னு கூப்பிட்டு அசிங்கப்படுத்துறீங்க.” அவனைக் கிண்டல் செய்வதுபோல தன் தோழியைக் கலாய்த்தாள்.
“நீ எவ்வளவு ஓட்டினாலும், நான் டையும் அடிக்க மாட்டேன். முடியை வளர்த்துக்கவும் மாட்டேன். சரிதான் போடி.” கழுத்தை நொடித்தாள் சாதனா.
உயர் பதிவியில் இருக்கும் இருவரும் கேலியும் கிண்டலுமாகப் பேசிக்கொள்வதை ரிஷிகுமார் கண்கொட்டாமல் பார்த்து நின்றான்.
“நாங்க மொத்தம் எட்டு பேர். அதுல இவதான் கடைக்குட்டி.” மஞ்சரியைத் தோளோடு சேர்த்துக் கட்டிக்கொண்டாள் சாதனா.
“அப்போ நீங்களும் சாதனா மேடம் மாதிரி காதல் திருமணமா…உங்க கணவரும் டாக்டரா….” என்றவனின் விழிகள் அவ்விடத்தை அளக்க, பக்கென்று சிரித்திருந்தாள் மஞ்சரி.
“அவரும் டாக்டர்தான். ஆனால் சமூகம் பெரிய இடம்.” சாதனா குறும்பு செய்ய, மஞ்சரியின் முகத்தில் வெட்கம் அப்பிக்கொண்டது.
“எனக்கு பத்து வயசு இருக்கும்போது என்னைத் தத்துக்கொடுத்துட்டாங்க ரிஷி. என் வளர்ப்பு அப்பா இராணுவத்தில் சேவை செஞ்சதுனால நானும் இந்தத் துறையிலேயே சேவை செய்யணும்னு ஆசைப்படுறாரு. ஆனால் என் காதல் மன்னன் வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். அமெரிக்காவுக்குப் போகணும்னு ஒற்றைக் காலில் நிக்குறான். ரெண்டு பேருக்கும் நடுவில் மாட்டிட்டு நான் படும்பாடு இருக்கே…” சலித்துக்கொண்ட மஞ்சரி, தந்தையின் சம்மதத்துடன் உயிரானவனின் கரம் பிடிக்க அவள் எதிர்கொள்ளும் சவால்களை பூரிப்பு மின்ன விவரித்தபடி முகாமின் வேலைகளை ஜரூராகச் செய்துவந்தாள்.
‘எத்தனை விதமான மனிதர்கள்; எத்தனை விதமான போராட்டங்கள்!’, சாய்வு நாற்காலியில் சயனித்தவாறு இரத்ததானம் செய்த ரிஷிகுமாரின் மனத்தில் ஏதேதோ கற்பனைகள் ஊற்றெடுத்தது. சாதனா தன் கூடப்பிறந்தவளாக இருந்தால் எத்தனை அழகாக இருக்குமென யோசித்தவன், அதை அவளிடம் வெளிப்படையாகவே பகிர்ந்தான்.
“டோன்ட் பி டூ எமோஷனலி அட்டாச்ட் டு எனி ஒன் ரிஷி. (Don’t be too emotionally attached to anyone Rishi).” உறுமினாள் சாதனா.
“இல்ல மேடம்…சொல்லணும்னு தோணித்து.” அவன் பின்வாங்க,
“அப்படியே யாராவது சொந்தம்னு சொல்லிட்டு வந்தாலும், அவங்களோட உறவாடவும் மாட்டேன்; அவங்களுக்காக என் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீரும் வராது!” கறுவினாள் அவள்.
“வெங்காயம் கட் பண்ணாக்கூடவா?” தோழியைக் கலாய்த்த மஞ்சரி, பேய் அறைந்தாற்போல முழிக்கும் ரிஷிகுமாரைப் பார்த்துக் கண்சிமிட்டினாள்.
“நெவர்!!! முடிஞ்சா என்னை அழவைங்க பார்க்கலாம்.” இருவரையும் பார்வையால் சுட்டெரித்தாள் சாதனா.
சாதனா விட்டிருந்த சவால் மனத்தையும் புத்தியையும் ஆக்கிரமிக்க, ஏதாவது செய்து அவளை அழவைக்க வேண்டுமென்ற வெறி ரிஷிகுமாரின் தலைக்கேறியது. மஞ்சரியின் நினைவுவர அவளை அழைத்தவன்,
“எனக்கும் உங்க ஃப்ரெண்டுக்கும் சிப்ளிங்க் டெஸ்ட் பண்ணா மாதிரி ஒரு பொய் ரிப்போர்ட் கொடுங்க மஞ்சரி.” அலட்டலே இல்லாமல் உரைத்தான்.
“என்ன விளையாடுறீங்களா ரிஷி. நல்லவர்னு நெனச்சு சிரிச்சுப் பழகினா, இப்படிக் கேவலமான யோசனை எல்லாம் சொல்றீங்களே!” எடுத்த எடுப்பிலேயே கர்ஜித்தாள் அவள்.
“கூல் கூல் மேடம். இப்போ என்ன கேட்டுட்டேன்னு இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க. வெங்காயம் கட் பண்ணா கூட அழமாட்டேன்னு வசனம் பேசினவங்கள சீண்டத்தானே கேக்குறேன். நீங்க சும்மா உங்க லெட்டெர் ஹெட்ல நாலு வரி டைப் செஞ்சா போதும்.
ஐ பிராமிஸ். அவங்க கண்ணுல ஒரு சொட்டுக் கண்ணீர் பார்த்தவுடனே உண்மையைச் சொல்லி அதைக் கிழிச்சுப் போட்டுடலாம்.” மடமடவென்று அவன் திட்டங்களைத் தீட்ட,
“திஸ் இஸ் தி லிமிட் ரிஷி!” ஆவேசமாய் எச்சரித்து அழைப்பைத் துண்டித்தாள் மஞ்சரி.
வேறுவழி என்னவென்று சிந்தித்தபடியே ரிஷி நித்திரையில் மூழ்க, உறக்கமின்றி தவித்தாள் மஞ்சரி.
கல்வி லட்சியம் என எவ்வளவுதான் நிமிர்வாக வாழப்பழகியிருந்தாலும், தாய் தந்தைப் பாசத்திற்காக ஏங்கி மறுகிய சாதனாவின் எதிர்பார்ப்புகள் பசுமரத்தாணி நினைவுகளாக மலர்ந்து அவளை வாட்டியெடுத்தது.
ரிஷிகுமார் சொல்வது உண்மையாகி, தோழி உறவுகளோடு சேர்ந்தால் எத்தனை நெகிழ்வான தருணமாகும் எனச் சிந்தித்தவளின் மனம் ஊசலாடியது. பிறந்த தேதி மட்டுமல்லாது, அவர்கள் வாழ்க்கையில் நடந்த விஷயங்களிலும் ஒற்றுமை இருப்பதை அசைபோட்டாள்.
பிறந்தே இறந்திருந்த ரிஷிகுமாரின் சகோதரி;
மகளை விட்டு மகனை மட்டும் அழைத்துச் சென்ற சாதனாவின் பெற்றோர்;
என ஒன்றுக்கு ஒன்று முட்டுக்கொடுப்பது போல தோன்ற, பரிசோதனை செய்து பார்ப்பதில் என்ன தீங்கு வந்துவிடப் போகிறது என முடிவுக்கு வந்தவள் களத்தில் இறங்கினாள்.
சில மணி நேரங்களில், “மாட்சிங்க்!” கணினியில் காட்டிய பரிசோதனை முடிவுகளைக் கண்டவள் உறைந்து நின்றாள்.
உதிரத்தின் மாதிரிகள் உண்மைகளை உடைக்க,
உறவாட வந்தவள் உடன் பிறந்தவள் ஆனாள்;
உள்ளத்து ரகசியங்கள் உக்கிரமாய் வெடிக்க,
உரசல்கள் நீளுமா; உரிமைகள் ஓங்குமா-மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்….
பின்குறிப்பு:
பாசமென்னும் பள்ளத்தாக்கில் ‘மஞ்சரி’ கதாபாத்திரம் மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்புறேன். ஒரு காட்சியில், சரண் தன் தங்கை பல்லவியின் காதலை எதிர்க்கும்போது, “நம்ம காதலில் இல்லாத சவால்களா சரண்!” என மஞ்சரி கணவருக்கு நினைவூட்டுவாள்.
அவர்கள் அப்படியென்ன சவால்களை சந்தித்தார்கள் என்பதற்கு சின்னதொரு clue தரும் விதமாக இவ்வத்தியாயத்தில் ஒரு காட்சி இணைத்துள்ளேன். இதை storylineஆக வைத்து சரண் மஞ்சரிக்கு தனிக்கதை எழுதவும் ஒரு எண்ணம் இருக்கிறது.


Please Comment Here